Publish Date: Sat, 24 Jan 2009 (11:57 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (11:56 IST)
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் அமர்நாத் பனிலிங்கக் கோயிலில் இருப்பது போன்ற பனி லிங்கத்தை சென்னைத் தீவுத்திடலில் அமைத்துள்ளனர்.
இந்த அமர்நாத் பனிலிங்கம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதைச் சுற்றிப் பார்க்கும்போது அமர்நாத் பனிலிங்கம் கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்தது போல உணர்வும், மனதிருப்தியும் ஏற்படுகிறது.
வெறும் பனி லிங்கம் மட்டுமல்லாமல் அமர்நாத் மலைக்கோவில் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு அதன் உள்ளே சென்றதும் வெள்ளியை உருக்கிவிட்டது போல பனித்துகள்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள்ளே சென்றதும், ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..என்ற தெய்வீகப் பாடல் மட்டுமே ஒலிக்கிறது. இறைவனை தரிசிப்பதோடு, அமர்நாத் மலைக்கோவிலின் தோற்றத்தையும் காண வாய்ப்பாக உள்ளது.
இமயமலையில் உள்ளது போல இங்கும் 9 வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சிவன், ராமன், அர்த்தநாரீஸ்வரர், ராதாகிருஷ்ணன் தரிசனத்திற்கான கோவில்கள் உள்ளன. நான்காவது மலை வளைவில் செல்லும்போது அமராவதி நதியைக் கடக்க வேண்டியுள்ளது. ஒன்பது வளைவுகளைக் கடந்து மலை உச்சிக்குச் சென்றதும் நம்மை மெய் மறக்கச் செய்யும் 20 அடி உயர பனிலிங்கத்தைக் காணலாம். பனிலிங்கம் உருகாமல் இருப்பதற்காக -7 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.
காலை 10 மணிக்கும், இரவு 10 மணிக்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பனிலிங்க தரிசனத்தைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். இரவு மின்னொளியில் அமர்நாத் மலைக்கோவில் ஜொலிப்பது அனைவரையும் கவர்வதாக உள்ளது. தரிசனம் முடித்து திரும்பும்போது பிரசாதமும் வழங்கப்படுகிறது.
சென்று வாருங்கள். இறைவனை தரிசித்து ஆசி பெற்று வாருங்கள்.