Publish Date: Fri, 23 Sep 2011 (17:08 IST)
Updated Date: Tue, 22 Jan 2008 (18:32 IST)
முதலில் தடை செய்யப்பட்டு பிறகு ஏராளமான நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் கவனத்தையே ஈர்த்தது.ஜனவரி 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 550 காளைகளும், அவைகளை அடக்க 450 காளையர்களும் களமிறங்கினர்.ஆனால், இந்த ஆண்டு காளைகளின் கூரான கொம்புகள் ஆட்சியரின் மேற்பார்வையில் வெட்டி மழுங்கடிக்கப்பட்டன. கலந்து கொண்ட காளையர்களும் முழு சோதனைக்குட்படுத்தப்பட்டு தனி ஆடைகள் அளிக்கப்பட்டு களமிறங்க அனுமதிக்கப்பட்டனர்.வெள்ளி, தங்க நாணயத்தில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி, படுக்கைகள் போன்றவை பரிசுப் பொருட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 11.30 மணிக்குத் துவங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5 மணி வரை நடந்தது.காளைகளை அடக்க காளையர்கள் முயன்றனர். தங்களுடைய சக்தியைக் காட்டிய காளைகள் அவர்களை தூக்கி எறிந்து தங்களை நிரூபித்தன காளைகள். எல்லா காளைகளும் அடக்கப்படவும் இல்லை. காளையர்கள் அடக்குவது முழுமையாக தோற்றுவிடவும் இல்லை. குறைவான காயங்களுடன் நிறைவாக நடந்து முடிந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
மாவட்ட நிர்வாகத்தின் பார்வையிலும், விலங்கு நல வாரியத்தின் கழுகுப் பார்வையிலும் பயங்கர சர்ச்சைக்கு இடையே நடந்து முடிந்தாலும் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய விளையாட்டு இனிதே நடந்து நிறைவேறியது.
இதன் வீடியோவை அடுத்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் நீங்கள் பார்க்கலாம்.