Publish Date: Fri, 23 Sep 2011 (17:07 IST)
Updated Date: Sat, 06 Oct 2007 (11:43 IST)
தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.
தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் ஒரே நாளில் விரைவாகச் சென்று திரும்பும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தனியார் ஹெலிகாப்டர் நிறுவனங்களுடன் ஆய்வு செய்து அடுத்து ஒரு மாதத்துக்குள் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை வசதி ஆகியவை இணையதளம் மூலம் வெளியிடப்பட்டு மருத்துவ சுற்றுலா வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு மருத்துவ சிகிச்சை வசதிகளை தமிழகத்தில் பெறும் வகையில் இந்த மருத்துவமனைகளில் தனி தகவல் பிரிவு அமைக்கப்பட உள்ளது என்றார் அமைச்சர்.
தமிழகத்தில் வனப் பகுதிகளில் இரவில் சுற்றுலா செல்லும் வகையில் "நைட் சஃபாரி' திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வனத்துறையின் இசைவு கிடைத்தவுடன் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்ர் கூறினார்.
தமிழக சுற்றுலா துறைக்குச் சொந்தமான பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய வால்வோ ஏசி சொகுசு பஸ்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஐடி நிறுவனத்தினருக்கான பிரத்யேக சுற்றுலா சேவை குறித்து அந்நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இதன்பின் ஐடி துறையினருக்கு பிரத்யேகமாக உல்லாச சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.