Publish Date: Fri, 23 Sep 2011 (17:07 IST)
Updated Date: Sat, 06 Oct 2007 (11:35 IST)
சுற்றுலா மூலம் ரூ.3,020 கோடி அன்னியச் செலாவணி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் அன்பழகன் கூறினார். தெரிவித்தார்.
சென்னையில் தொடங்கிய இந்திய சுற்றுலா காங்கிரஸ் 56-வது மாநாட்டில் அமைச்சர் அன்பழகன் பேசுகையில், தமிழகம் சுற்றுலா தொழில் வளர்ச்சிக்கு பிரதான கேந்திரமாக உள்ளது. மாநிலத்தில் பல்வேறு அழகிய கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், கோவில்கள், சரணாலயங்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன என்றார்.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையைப் பொறுத்தவரை நாட்டிலேயே தமிழகம் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது. பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ள 26 சின்னங்கள் இந்தியாவில் உள்ளன. இதில் தமிழகத்தில் மாமல்லபுரம், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் கோயில் கங்கைகொண்டசோழபுரம் கோயில், நீலகிரி மலை ரயில் உள்ளிட்ட 5 இடங்கள் உள்ளன என்று அமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.
சுற்றுலா துறை மூலம் ரூ. 3,020 கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது தமிழகத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை 13.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் பயணிகளின் வருகை 21.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர தீவிர பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.