Publish Date: Mon, 15 Nov 2010 (11:23 IST)
Updated Date: Mon, 15 Nov 2010 (11:23 IST)
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகாதீபத்தை காண மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக மலைக்கு செல்லும் பாதையில் பறக்கும் பலூன் விளக்குகள் அமைக்கப்படும் என்று வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. ரமேஷ் குடாவ்லா தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டு திருவிழாயையொட்டி 21-ந் தேதி காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
இதுபற்றிய ஆய்வு கூட்டம் வடக்கு மண்டல ஐ.ஜி. ரமேஷ் குடாவ்லா தலைமையில் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் குடால்வா, தீப திருவிழாவை விட இந்த திருவிழா பாதுகாப்பு பணிக்கு கூடுதல் காவல்துறையினர் வருகின்றனர். குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வெளிமாவட்டங்களில் இருந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் வருகின்றனர். அவர்கள் மாறுவேடத்தில் கண்காணிப்பார்கள்.
கிரிவலப்பாதை மற்றும் மலை உச்சியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் வைக்கக்கூடாது. கிரிவலப் பாதையை விட்டு சில அடி தூரத்தில்தான் கடை வைக்க வேண்டும்.
மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக பக்தர்கள் செல்லும் வழியில் பறக்கும் பலூன் விளக்குகள் அமைக்கப்படுகிறது. மாலையில் தீபம் பார்த்து விட்டு பக்தர்கள் ஊருக்கு புறப்படும் நேரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அந்த நேரத்தில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் தடை செய்யப்படும் என்று அவர் கூறினார்.
Webdunia
Publish Date: Mon, 15 Nov 2010 (11:23 IST)
Updated Date: Mon, 15 Nov 2010 (11:23 IST)