Publish Date: Sat, 13 Nov 2010 (11:33 IST)
Updated Date: Sat, 13 Nov 2010 (11:33 IST)
வரும் 21ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கார்த்திகை தீபத் திருவிழா என்றாலே அது திருவண்ணாமலையைத்தான் பலருக்கும் நினைவூட்டும். இந்த கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாகவும், அக்னித் தலமாகவும் வழிபடப்படுகிறது. இந்த நிலையில், கார்த்திகைத் தீபத் திருவிழா அன்று மாலை, திருவண்ணாமலையில் அகண்ட கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
இந்த விழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலையில் நடை திறந்து சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவித்து அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதைத் தொடர்ந்து விநாயகர், முருகர், உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர். கொடியேற்றத்தை தொடர்ந்து கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து நேற்று காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமான வாகனங்களில் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், அதிகார நந்தி, ஹம்சம், சின்ன ரிஷப வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.
இன்று (சனிக்கிழமை) 2-வது நாள் விழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் 17-ந் தேதி புதன்கிழமையும், தேரோட்டம் 18-ந் தேதி வியாழக்கிழமையும் நடக்கிறது.
21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உலகம் முழுவதில் இருந்தும் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Webdunia
Publish Date: Sat, 13 Nov 2010 (11:33 IST)
Updated Date: Sat, 13 Nov 2010 (11:33 IST)