Publish Date: Wed, 24 Sep 2008 (17:57 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (17:56 IST)
திருமணத்தன்று ஓடிப்போகும் மணப்பெண். திருமணம் நின்றதற்கு காரணம் நான்தான் என்று பழியை சுமக்கும் மணமகன். மகள் ஏற்படுத்திய அவமானத்திற்கு பரிகாரமாக, மணமகனுக்கு வேறு பெண் பார்க்கும் மணமகளின் தந்தை. சரிதான்... சோகத்தை சாத்துக்குடியாக பிழியப் போகிறார்கள் எனறு பார்த்தால்... சர்ப்ரைஸ். ஊட்டி குளிரில் உல்லாசப் பயணம் போய் வந்த ஜில்.சொந்தமாக தொழில் செய்யும் சேரனுக்கு திருமணம் தள்ளிப்போகிறது. உணர்ச்சி வசப்படும் போது ஏற்படும் திக்குவாயும், சின்ன வயதில் எடுத்துக்கொண்ட மனநல சிகிச்சையும் சேரனின் திருமணத்திற்கு தடையாக இருக்கின்றன.
கடைசியில் திருமணத்திற்கு ஒரு பெண் கிடைக்கிறார். அவரும் திருமணத்தன்று காதலனுடன் ஓடிப்போகிறார். சேரனுக்கு ஏற்படும் அவமானத்திற்கு பரிகாரமாக அவருக்கு பெண்தேடுகிறார் மணப்பெண்ணின் தந்தையான மணிவண்ணன்.
கார்த்திகாவை பெண் பார்க்க சேரனை நாகர்கோவிலுக்கு அழைத்து செல்கிறார் மணிவண்ணன். அங்கு தன்னை மணமேடையில் உதறிவிட்டுப்போன ரம்யா நம்பீஸனையும், தன்னை முதல் முதலில் பிடிக்கவில்லை என்று கூறிய விமலா ராமனையும் சந்திக்கிறார் சேரன். அவரது நண்பர் பசுபதி சொல்லும் நவ்யாநாயரும் அங்குதான் இருக்கிறார். சேரன் யாரை திருமணம் செய்தார் என்பதுடன் சுபம்.
சிரிப்பிலும் சோகம் சுமக்கும் சேரன். சீதையை தேடும் ராமன் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தினாலும் ஏற்கனவே பார்த்த சேரன் என்பதால் சுவாரஸியம் மிஸ்ஸிங். நவ்யா நாயரை பெண் பார்க்கப் போய் அவரிடமே லத்தி சார்ஜ் வாங்கும் போதும், விமலா ராமன் வீட்டு பாத்ரூமிலிருந்து நொந்த இதயமும் நொறுங்கிய உடம்புமாக வெளிவரும் போதும் பரிதாபப்படவைக்கிறhர்.
கண் தெரியாத பசுபதி எபிஸோட் தன்னம்பிக்கை பூஸ்ட். கண் தரியாதவர்களுக்கே உரிய முகச்சுளிப்பை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கஜாலாவிடம் காதலை சொல்லாமல் அவரது பெற்றோரிடம் சொல்லும் பசுபதியின் தன்னம்பிக்கை ஜோர்.
கார்த்திகாவின் வீட்டில் கன்னம் வைக்கப்போய் காதல் வாங்கிவரும் நிதின் சத்யாவின் எண்ட்ரி கலகல. கார்த்திகா நாலு பேரிடம் நல்ல பெயர் வாங்கச் சொன்னதற்காக அவர் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதும், பிறகு கார்த்திகாவிடம் வாங்கி கட்டிக்கொள்வதும் ரசிக்க வைக்கும் காட்சிகள்.
நிதின் சத்யாவுக்கு தன் மீதுள்ள காதலை சேரன் சொல்லும் போது கார்த்திகாவின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் துளிர்கிறது. கார்த்திகாவின் நடிப்புக்கு இது ஒரு சோறு பதம்.
விமலா ராமனின் மனம் மெதுவாக சேரனை நோக்கி வருவதும் கடைசியில் அது அழுகையாக வெடிப்பதும் திரைக்கதையின் நேர்த்திக்கு எடுத்துக்காட்டு.
ரம்யா நம்பீஸன் தமிழுக்கு கிடைத்திருக்கும் நல்வரவு. காக்கி உடையில் நவ்யா நாயர் காமெடி.
நாகர்கோவிலின் அழகை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறhர் கேமராமேன் ராஜேஷ் யாதவ். லைவான லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். வித்யாசாகரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தாலாட்டு.
திரைக்கதையிலும் இயக்கத்திலும் இயக்குநர் ஜெகன்நாத்துக்கு கிடைத்திருப்பது பழுதில்லாத ஜெயம்.