Publish Date: Wed, 28 May 2008 (16:24 IST)
Updated Date: Wed, 28 May 2008 (16:14 IST)
திரையரங்கை விட்டு வெளியே வந்தால் நான்கு காட்சிகளாவது நினைவில் நிற்க வேண்டும். ஓ இதற்காகவா எடுத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படும் ஒரு காட்சியாவது இருக்க வேண்டும். இராசு மதுரவனின் பாண்டியில்...?
துரதிர்ஷ்டவசமாக எதுவும் இல்லை. நல்ல பெயர் எடுக்கும் மூத்த பிள்ளை. கெட்டதை மட்டுமே செய்யும் இளைய பிள்ளை. இதனை காட்சியாக விளக்கும்போதே நல்லதும் கெட்டதும் இடம்பெறும் என்பது எல்.கே.ஜி. குழந்தைக்கே தெரிந்துவிடும். பிறகு அம்மாவின் எதிர்பாராத மரணம். குடும்பத்தை காப்பாற்றும் தறுதலை பிள்ளையின் கஷ்டம். இறுதியில் பழிவாங்கல்.
தமிழ் சினிமாவின் இலக்கணம் வழுவாத மற்றொரு படம். மிடில் கிளாஸ் வாத்தியார் வேடம் நாசருக்கு. ஊதித்தள்ளக்கூட அவசியமில்லா பழகிப்போன சின்னஞ்சிறு வேடம். அவரது மனைவியாக சரண்யா. மகன் பழிவாங்குவதற்கென்றே உயிர்விடும் பரிதாப ஜீவன்.
லாரன்ஸ் நாயகன். நவரசத்தில் பலரசங்களை அவர் முகம் காட்ட மறுக்கிறது. அவரது அண்ணனாக ஸ்ரீமன். சினேகா நாயகி. இன்ஸ்பெக்டர் இளவரசின் மகளாக வந்து இளசுகளை இம்சைப்படுத்துகிறார். தண்ணி அடித்துவிட்டு அவர் போடும் லூட்டியில் தள்ளாடுகிறது திரையரங்கம்.
நமிதா இருக்கிறார் என்பதற்குமேல் எதுவுமில்லை. கஞ்சா கருப்பு, வையாபுரி காமெடியில் குலுங்கி சிரிக்க முடியவில்லை என்றாலும், குறுஞ்சிரிப்பு நிச்சயம். மயில்சாமியின் தொப்புள் மேட்டர் வயிறை பதம் பார்க்கும் சிரிப்பு.
இந்தப் படத்துக்கு இதுபோதும் என்பது போல பாடல்கள். காதுகளை விட பாடல் காட்சிகள் கண்களை நிறைக்கின்றன. உபயம் சினேகா, நமிதாவின் கவர்ச்சி.
எந்த விதத்திலும் எதிர்பார்ப்பை தூண்டாத திரைக்கதையில், நாயகன் பத்தே நிமிடத்தில் பணக்காரன் ஆகாமல் வெளிநாட்டில் குப்பை பொறுக்கும் எபிசோட் மட்டும் ஆறுதல்.
பாண்டி... பழகிப்போன விளையாட்டு.