Publish Date: Sat, 01 Sep 2007 (14:37 IST)
Updated Date: Sat, 01 Sep 2007 (12:54 IST)
"உலகம் தோன்றியதும் முதலில் தோன்றியது காதல்தான். உலகம் அழியப் போகும்போது இறுதியாக அழிவதும் காதல்தான்" என்ற புதிய மொழியுடன் திவ்யதர்ஷினி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் "மலரினும் மெல்லிய" படத்தை தயாரித்து வருகிறது.
படித்து பட்டம் பெற்று வெளிநாட்டுக்கு செல்லும் மாணவர்கள் மத்தியில் கிராமத்தில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்துவரும் விக்னேஷ் மீது தனது காதல் பார்வையை குருக்கள் மகளான வர்ஷினி வீசுகிறாள்.
கருத்தொருமித்த காதலராக இருவரும் காடு, கழனி, குளம், மலையடிவாரம், கோவில், ஆறு, மரத்தடி என வளைய வரும் இவர்களின் காதலுக்கு புதுவிதமான எதிர்ப்பு வருகிறது.
அந்த புதுவித சதியை விதியென்று விலகாமல் மதியால் வெல்வதற்கு முயற்சி செய்யும் இவர்களுடன் சிவசக்ரவர்த்தி, புகழேந்தி, பெசன்ட்நகர் ரவி, மகாலட்சுமி, நெல்லை சிவா, ராஜ்குமார், முத்துகாளை, பெரியார்தாசன், வர்ஷினி, பரணி ஆகியோர் நடிக்கின்றனர்.
புதுக்கோட்டை, கொடைக்கானல், அறந்தாங்கி, நாட்டரசன்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், ஸ்ரீபெரும்புதூர், சென்னை ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது.
கே.வி. மணி ஒளிப்பதிவையும், உதயகுமார் படத்தொகுப்பையும் செளந்தர்யன் இசையையும் முத்துவிஜயன், கவிமுகில், சிற்பி பாலமுருகன் பாடல்களையும் ஜெயம் முருகன், ஸ்பீடு சரவணன் நடனத்தையும் ராஜ்குமார் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
சுகுமாரி ராஜமனோகரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் டைரக்ஷனை புதியவரான செல்வராஜ் ஏற்று செய்து வருகிறார்.