Publish Date: Mon, 02 Mar 2009 (15:41 IST)
Updated Date: Mon, 02 Mar 2009 (15:39 IST)
கன்னட சினிமா உருவாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதனை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விழா எடுத்து கொண்டாடுகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவை நேற்று மாலை கர்நாடக முதல்வர் எடியூரப்பா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் முதலில் தாக்கப்படுவது கர்நாடகாவில் உள்ள தமிழ்ப் படங்கள் ஓடும் திரையரங்குகள்தான். இவ்விரு மாநில திரைத்துறையினரும் போட்டிப் போட்டு போராட்டங்கள் நடத்தியதை மறக்க முடியாது. அந்த நிகழ்வுகளை மையப்படுத்தி நேற்றைய விழாவில் பேசினார் கமல்ஹாசன்.
கலை வேறு அரசியல் வேறு. அரசியல் லாபத்துக்காக யாரும் கலையை பயன்படுத்த வேண்டாம். கலைக்கும், அரசியலுக்கும் மக்களை ஈர்க்கும் சக்தி இருந்தாலும் இரண்டும் வேறுபட்டவை என்று பேசிய கமல், நாகேஷ், சரோஜா தேவி போன்ற கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த கலைஞர்களை தனது பேச்சில் குறிப்பிட்டார். கன்னட சினிமாவின் நூறாவது வருட கொண்டாட்டத்துக்கும் தன்னை அழைக்க வேண்டும் என்று தனது உரையில் அவர் கேட்டுக் கொண்டார்.
விழாவில் சரோஜா தேவி, செளகார் ஜானகி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.