Publish Date: Fri, 09 Jan 2009 (15:36 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (12:48 IST)
தனது முதல் படத்தில் நந்திதாதாஸை நடிக்க வைத்த தங்கர்பச்சானுக்கு நடிகர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பது ஒரு நகை முரண். இத்தனைக்கும் அவரது படத்தில் நடித்தவர்களுக்கு நல்ல பெயரே இதுவரை கிடைத்து வந்திருக்கிறது.
ஒன்பது ரூபாய் நோட்டு படத்துக்குப் பிறகு தங்கர்பச்சான் இயக்கும் படத்தில் பிரபுதேவா நடிப்பதாக இருந்தது. மகனின் திடீர் மறைவால் நொறுங்கிப் போன பிரபுதேவா படத்திலிருந்து விலக, யாரை நடிக்க வைப்பது என தங்கர்பச்சானுக்கு குழப்பம். அவர் இஷ்டப்பட்டு நெருங்கிச் சென்ற பலரும் காத தூரம் ஓடினார்களே தவிர கால்ஷீட் தரத் தயாராக இல்லை.
இந்நிலையில் தங்கரின் படத்தில் மாதவனும், சத்யராஜும் இணைந்து நடிப்பதாக செய்திகள் கூறுகின்றன. தொலைந்து போனவர்கள் என படத்துக்கு பெயரிட்டுள்ளார் தங்கர்பச்சான். இது பிரபுதேவா நடிப்பதாக இருந்த கதை அல்ல என்றும் கூறப்படுகிறது.
தங்கர்பச்சான் படத்தை தொடங்கும் வரை எதையும் உறுதியாக கூற முடியாது என்பதே உண்மை நிலவரம்.