Publish Date: Tue, 06 Jan 2009 (23:06 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (16:01 IST)
வித்தியாசம் என்ற வார்த்தைக்கு விசுவாசமாக இருந்தது, சக்தி செல்லத்தின் ஒளியும் ஒலியும் படத்தின் இசை வெளியீட்டு விழா.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து குறும்பட இயக்குனர் சக்தி செல்லம் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் ஒளியும் ஒலியும். பிறப்பு படத்தில் நடித்த பிரபா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் இன்னொரு விசேஷம் சமுக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம். பலர் நடிக்க அழைத்தும் தொடர்ந்து மறுத்து வந்தவர் ஒளியும் ஒலியும் கதையை கேட்டு உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத இளம் பெண் ஒருவரும் படத்தில் நடித்துள்ளார்.
யானி தேஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை மொத்தமாக வெளியிடாமல் தனித்தனி பாடலாக வெளியிட்டனர். முதல் நான்கு பாடல்களை இயக்குனர்கள் பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், காந்தி கண்ணதாசன் ஆகியோர் வெளியிட்டனர். ஐந்தாவது பாடலை வெளியிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
சினிமாவே பார்க்காத கலாம் எப்படி இதற்கு ஒத்துக் கொண்டார்?
சக்தி செல்லம் இசை வெளியீட்டு விழாவுக்கு அப்துல் கலாமை வரவழைக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் அவருக்குப் பதில் அவரது புகைப்படத்தை வைத்து ஐந்தாவது பாடலை வெளியிட்டார். இந்த அளவுகடந்த கலாம் பக்திக்கு தனது உரையில் விளக்கமளித்தார் சக்தி செல்லம்.
நேரில் வராத கடவுளை வீட்டில் புகைப்படமாக வைத்து வழிபடுவதில்லையா? அதுபோல்தான் இதுவும்.
புல்லரிக்க வைக்கும் விளக்கம்தான்.