Publish Date: Tue, 06 Jan 2009 (23:02 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (15:45 IST)
சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுள்ளது.
சிம்பு, சினேகா, சனாகான் நடித்த சிலம்பாட்டம் படத்தில் ஆபாசம் அதிகமிருப்பதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். படத்தில் வழக்கறிஞர்களை அவமதிப்பதுபோல் சிம்பு வசனம் பேசியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் படத்தில் வழக்கறிஞர்களை குறிப்பிட்டு சிம்பு பேசும் சர்ச்சைக்குரிய வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமிருப்பதாகவும், பத்து வயது சிறுவன் கொலைகள் செய்வதாகவும் சமுக பொறுப்பில்லாமல் சிலம்பாட்டம் படத்தை எடுத்திருப்பதாக வழக்கு தொடுத்தவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிலம்பாட்டம் படத்தின் இயக்குனர் சரவணன், படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. சிலர் சொல்வதைப்போல் ஆபாசத்தை என்னுடைய படத்தில் திணிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த மாதம் வெளியான படங்களில் அதிக கலெக்சனுடன் சிம்புவின் சிலம்பாட்டம் அனைத்து சென்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.