Publish Date: Tue, 06 Jan 2009 (21:43 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
ஐசிஏஎஃப் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடத்தும் ஆறாவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கலைவாணர் அரங்கில் நடந்த இந்த விழாவில் அமைச்சர் பரிதி இளம்வழுதி, எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ., பிரபல இயக்குனர்கள் Dante Nico Gracia, Raymund George Fernandes, Uberto Pasolini ஆகியோர் கலந்து கொண்டனர்.
துல்பன்
விழாவின் முதல் படமாக கசகஸ்தான் இயக்குனர் Sergi Dvortsevoy -ன் துல்பன் திரையிடப்பட்டது. பிரபல ஆவணப்பட இயக்குனரான செர்கியின் முதல் முழுநீள திரைப்படம் துல்பன் என்பது குறிப்பிடத்தக்கது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இவருக்கு விருது பெற்றுத்தந்த படம் இது.
இந்த மாதம் 2ம் தேதி கோவாவில் முடிவுற்ற 36வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்க மயில் விருதை துல்பன் வென்றது. சிறந்த இயக்குனருக்கான விருதை செர்கிக்கு கமல் ஹாசன் வழங்கினார்.
கசகஸ்தானின் வறுமையை செர்கி இந்தப் படம் மூலம் விலைபேசிவிட்டார் என கசகஸ்தான் அரசாங்கம் இவரை குற்றப்படுத்தியது. ஆனால் ஜனங்கள் இந்த திரைப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்றனர். “கசகஸ்தானில் ஏழைகளும், பணக்காரார்களும் உள்ளனர். நான் ஏழை ஜனங்களை பற்றி படம் எடுத்திருக்கிறேன். இதில் என்ன தவறு’ என்பது செர்கியின் வாதம்.
திரைப்பட விழாவை அர்த்தப்பூர்வமாக்கிய திரைப்படமாக துல்பன் நேற்று பார்வையாளர்களை ஆகர்ஷித்தது.