Publish Date: Tue, 06 Jan 2009 (21:40 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது போலிருக்கிறது. பாதியில் கைவிடப்பட்ட கெட்டவனை மீண்டும் தொடர தீர்மானித்திருக்கிறார் சிம்பு.
பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தும் சிம்புவுக்கு வெற்றித் திருமுகமாக அமைந்தது அவரது கைவண்ணத்தில் உருவான மன்மதன் படம் மட்டுமே. வல்லவனும் முதலுக்கு மோசம் செய்யவில்லை.
அந்த தைரியத்தில் தொடங்கிய கெட்டவனுக்கு ஆரம்பம் முதலே சோதனைகள். நடிக்கத் தெரியவில்லை என்று படத்தின் நாயகி லேகா வாஷிங்டனை மாற்றினார். அதனைத் தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சனைகள். இதுக்குமேல் தாங்காது என்று படத்தின் தயாரிப்பாளர் பரதன், செலவு செய்த கோடிகளை திருப்பி வாங்கி, கெட்டவனின் பொறுப்பை சிம்புவிடம் ஒப்படைத்தார்.
பாதி படப்பிடிப்பு முடிந்த கெட்டவனை தொடர முன்வந்துள்ளாராம் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. இதனால் அடுத்து நடிப்பதாக இருந்த போடா போடியை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளாராம் சிம்பு.
அரசனை நம்பி அரசமரம் சுற்ற தீர்மானித்துள்ளார். பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.