Publish Date: Tue, 06 Jan 2009 (21:31 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
தீபாவளி, பொங்கல், நியூ இயர்கள் அனைத்தையும் தாண்டி இன்னும் படப்பிடிப்பு நிலையிலேயே இருக்கிறது சுசி. கணேசனின் கந்தசாமி. ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டதற்கு, படத்தின் தரம் முக்கியம் என நினைப்பதால் ஏற்பட்ட தாமதம்தான் இது என்றார்.
படம் தாமதம் ஆனாலும் தயாரிப்பாளர் தாணு சந்தோஷமாகவே இருக்கிறார். படத்துக்கு இப்போதே கிடைத்து வரும் 'கோடி' க்கணக்கான வரவேற்புதான் காரணம். விக்ரமின் அந்நியன் கேரள உரிமை 1.5 கோடிக்கு விலை போனது. கந்தசாமியின் விநியோக உரிமை அப்படியே டபுள். 3 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் படத்தின் சானல் உரிமையை நான்கரை கோடிக்கு வாங்க முன்வந்துள்ளதாம் சன் டிவி. கந்தசாமியின் தொடக்கவிழாவையே பிரமாண்டமாக சன் டிவி-யில் ஒளிபரப்பியவர்கள் படத்துக்கு எப்படி விளம்பரம் செய்வார்கள் என யோசித்து இப்போதே மிரள்கிறார்கள்.
கந்தசாமியை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.