Publish Date: Wed, 15 Oct 2008 (15:33 IST)
Updated Date: Wed, 15 Oct 2008 (15:33 IST)
திரையுலகம் வரும் பத்தொன்பதாம் தேதி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் பேரணி நடத்துகிறது. அனைத்து திரையுலக கலைஞர்களும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்கமும் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நெய்வேலி போராட்டத்தை முன்னின்று நடத்தியதைப் போலவே இந்தப் போராட்டத்தையும் தலைமையேற்று நடத்த இருக்கிறார் பாரதிராஜா.
பேரணி நடக்கும் இடத்தை பார்வையிடுவதற்காக அவர் ராமேஸ்வரம் சென்றுள்ளார். போராட்டத்திற்கு வசதியான இடத்தை அவர் இன்று தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இரண்டுவாரத்தில் தீர்வு காணவில்லை என்றால் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்வதென முடிவு எடுத்துள்ள நிலையில் நடத்தப்படும் பேரணி என்பதால் திரையுலகினரின் போராட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.