இயக்குனர் பாலா இயக்க, சூர்யா நடித்த நந்தா படம் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் 'லொடுக்கு பாண்டி' என்கிற கருணாஸ். பல்வேறு படங்களில் காமெடியனாக இருந்து இன்று 'திண்டுக்கல் சாரதி' படம் மூலம் ஹீரோவானவர்.
ஆரம்பத்தில் 'பாப்' ஆல்பங்களை இசையமைத்து, பாடி வெளியிட்டு வந்தார். தற்போது சினிமாவில் முழு நேர நடிகராக மாறிவிட புதுப்புது ஆல்பங்கள் வெளியிட வேண்டும் என்கிற ஆசை நேரமின்மை காரணமாக முடியவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும், தொடர்ந்து ஹீரோவாக வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்கிறார். காமெடியில் இரட்டை அர்த்தத்தில் பேசுவதில்லை என்று முடிவெடுத்திருந்தாலும், சில படங்களில் இயக்குனர்களின் வற்புறுத்தலால் பேசவேண்டியதாக இருக்கிறது என்று வேதனைப்படுகிறார்.
இன்றைக்கும் இவருக்கு ரோல்மாடலாக இருக்கும் இரண்டு காமெடி நடிகர்கள் சந்திரபாபுவும், நகேஷும்தானாம். அந்த இருபெரும் கலைஞர்களை என்றென்றும் மறக்க முடியாது. அவர்கள் எனக்கு மட்டுமல்ல, பல காமெடி நடிகர்களுக்கு பாடமாக இருக்கிறார்கள் என்று புகழ்கிறார். மூத்த கலைஞர்களை நினைத்தாலே போதும் நடிப்பு தானாகவே வரும்.