Publish Date: Fri, 12 Sep 2008 (18:00 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (17:59 IST)
எம்.ஜி.ஆர். படத்தில் பணியாற்றியவரை சிவாஜி தவிர்ப்பதும், சிவாஜி படத்தில் பணிபுரிந்தவரை எம்.ஜி.ஆர். முறைத்ததும் ஒருகாலத்தில் நடந்த கதைகள்.
இன்று அப்படியொரு ஈகோ சூழல் தமிழ் திரையுலகில் இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். திரைமறைவில் பொறாமை உலவினாலும், திரையில் அதை பிரதிபலிக்க முடியாதபடி ஆரோக்கியமாகவே உள்ளது கோடம்பாக்கம். உதாரணம் வேண்டுமென்றால் இதோ...
சிம்பு படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன். ஆனால், சிம்புவின் போடா போடியில் தரண் இசையமைக்கிறார். வளர்ந்து வரும் இந்த இசையமைப்பாளரின் டியூன்களை சிம்புவை மயக்கியதால் இந்த மாற்றம்.
நியாயமாக யுவனுக்கு என்ன வரவேண்டும்? கோபம்! அங்குதான் நிகழ்ந்திருக்கிறது ஓர் ஆச்சரியம். தரண் கேட்டுக் கொண்டதால் போடா போடியில் ஒரு பாடலுக்கு குரல் கொடுக்க சம்மதித்துள்ளார் யுவன்.
அதுமட்டுமல்ல, பாக்யராஜ் சாந்தனுவை வைத்து இயக்கும் புதிய வார்ப்புகள் படத்திற்கும் ஒரு பாடலை பாடித்தர சம்மதித்துள்ளாராம்.
ஈகோ இல்லாமலிருப்பது எப்படி என்பதை இந்த இளைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
யுவனல்ல... பவுன்!