Publish Date: Wed, 20 Aug 2008 (20:08 IST)
Updated Date: Wed, 20 Aug 2008 (20:08 IST)
சென்னையில் உள்ள சத்யம் மல்டிஃபிளக்ஸ் தியேட்டர் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது. எப்படிப்பட்ட படங்களையும் அங்கே பார்த்தால் அதன் தரம் தனியாக உள்ளது.
மும்பை, ஐதராபாத் தியேட்டர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள இத்திரையரங்கில் தற்போது 3டி எனும் தொழில்நுட்பத்துடன் படங்களைத் திரையிட இருக்கிறார்கள். இதற்காக தென்கொரியாவின் மாஸ்டர் இமேஜ், இன்சைட் மீடியா நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆர்.டி.எக்ஸ்.-3டி படங்களைக் கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னால் வந்த 3டி படங்களுக்காக தனியாக கிராஃபிக்ஸ் செய்து அதை மட்டும் கண்ணாடி வழியாக தெரியும்படி காட்டினார்கள். ஆனால், தற்போது மொத்தப் படத்தையும் 3டி எ·பெக்டில் துல்லியமான ஒலியுடன் தெரியும்படி தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு காட்சியும் நம் கண் முன்னால் நடப்பது போல தத்ரூபமாக தெரியும்.
படம் பார்க்கிறோம் என்பது இல்லாமல் நேரில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்கிறார் சத்யம் சினிமாஸ் தலைமை செயல் அதிகாரி. படம் எடுப்பதிலாகட்டும், படம் காட்டுவதிலாகட்டும் நாம் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது தெளிவாகப் புரிகிறது.