Publish Date: Tue, 19 Aug 2008 (20:00 IST)
Updated Date: Tue, 19 Aug 2008 (20:00 IST)
வழக்கம்போல படங்கள் குறைந்த நடிகைகள் சொல்வதுபோல், 'கதைகளை தேர்வு செய்து எனக்கு எப்படிப்பட்ட கேரக்டர், யார் இயக்குனர் என்று கேட்டுப் பிடித்திருந்தால் மட்டும் நடிக்கிறேன்' என்று கதைப்பது போல் தற்போது 'காதல்' சந்தியாவும் பேசி வருகிறார்.
காரணம் கைவசம் சில படங்கள் மட்டும்தான். அதுவும் முடிவுபெறும் நிலையில் உள்ளது. கன்னடத்தில் 'நந்தா', 'ஓடிப்போலாமா' என்ற இரண்டு படங்கள். மலையாளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் 'சைக்கிள்' ஆகிய படங்களைத் தவிர, தமிழில் 'மஞ்சள் வெயில்', 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது.
இதனால் கவலையாகிப் போன சந்தியா இப்படி கதை தேர்வு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அத்தோடு, சம்பளம் எனக்கு முக்கியமில்லை கதைதான் முக்கியம். அப்படிப்பட்ட கதைகளுக்காக சம்பளத்தை வேண்டுமானாலும் குறைத்துக் கொள்வேன் என்கிறார்.
மேலும், வேண்டாத சிலர் நான் தெலுங்கு, கன்னட சினிமாவுக்குப் போய்விட்டேன், தமிழில் நடிக்க வருவது கஷ்டம் என்று வேறு பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வாயை அடைக்கும் விதமாக பல படங்களில் நடிக்க இருக்கிறேன் என்கிறார் சந்தியா.