Publish Date: Sat, 16 Aug 2008 (18:16 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:09 IST)
குசேலன் படம் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருந்தாலும் வசூலில் சாதனை படைக்கவில்லை. காரணம் ரஜினி படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்ததுதான்.
தங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி சூப்பர் ஸ்டாரை பயன்படுத்தவில்லை என்ற கோபம் ஒருபுறம் இருக்க, பாடல்களும் சுமார் ரகமாக இருக்கிறது என்ற கமெண்ட் ஒருபுறம். அத்தோடு நிருபராக வரும் இயக்குனர் சுந்தர்ராஜன் ரஜினியிடம் கேட்கும் கேள்விகளும், அதற்கு ரஜினி சொல்லும் பதில்களும் ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டு தமிழ் ரசிகர்களின் மனதை வேதனைப் படுத்தப்பட்டதாக ஏகப்பட்ட கண்டனக் குரலுக்கு ஆளான ரஜினி. இந்த கேள்வி பதிலுக்கு ரசிகர்களிடம் ஏற்பட்ட வருத்தத்தை உணர்ந்த ரஜினி, உடனடியாக ரசிகர்களுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கும்படி இயக்குனரை கேட்டுக் கொண்டார்.
அதன்படி தமிழ்நாட்டில் ஓடும் அனைத்து தியேட்டர்களின் பிரிண்ட்டுகளை மீண்டும் எடிட் செய்து அந்த காட்சிகளை நீக்கியிருக்கிறார்.
எது எப்படியோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதையாக, ரசிகர்களின் எதிர்ப்புக்கு சமாதானம் செய்ததோடு, கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட விவகாரமும் லேசாக மறையத் தொடங்கிவிட்டன.