Publish Date: Mon, 14 Jul 2008 (14:19 IST)
Updated Date: Mon, 14 Jul 2008 (14:18 IST)
நடிகர் சத்யராஜ் தனது மகன் சிபிராஜின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதோடு கல்யாணத்துக்கும் நாள் குறித்துவிட்டார்.
சிபிராஜ் எட்டு வருடங்களாக ரேவதி எனும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தில் இன்ஜினியரிங் முடித்து தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வரும் ரேவதி, கடலூர் ரியல் எஸ்டேட் அதிபரின் மகளாம்.
எட்டு வருடங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் மூலம் சிபி - ரேவதி சந்திப்பு நிகழ்ந்ததாம். ஆரம்பத்தில் நட்பாக இருந்த பழக்கம் பின்னர் காதலாக கனிந்துவிட்டது. தன் காதல் விஷயத்தை அப்பாவிடம் மனம் திறந்து பேசியுள்ளார் சிபி. சத்யராஜும் மகனின் எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து கல்யாண ஏற்பாட்டை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.
சிபி-ரேவதி திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அடுத்த நாள் 15 ஆம் தேதி மேயர் ராமநாதன் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.
இந்தத் திருமணம் பற்றி பேசியுள்ள சத்யராஜ், "நான் காதலுக்கு எதிரியல்ல. எனது மகனின் திருமணம் அரசாங்க சான்றிதழின் படி கலப்பு மணம்தான். மற்றபடி எனக்கு ஜாதி, மதங்களில் நம்பிக்கை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
'புரட்சித்தமிழன்' என்று பட்டத்தை வைத்துக்கொண்டு இதுகூட செய்யவில்லையென்றால் எப்படியாம்?