Publish Date: Wed, 09 Jul 2008 (15:51 IST)
Updated Date: Wed, 09 Jul 2008 (15:51 IST)
'உளியின் ஓசை' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதி அதன் மூலம் கிடைத்த ரூ.25 லட்சத்தை நலிந்த கலைஞர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள திரைப் படம் "உளியின் ஓசை''க்காக அந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் எனக்கு ரூ.25 லட்சம் அளித்தனர்.
அந்தத் தொகைக்கு நான் கட்ட வேண்டிய வருமான வரி போக எஞ்சிய தொகையை- தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர், இயக்குநர் ராமநாராயணன் மூலமாக திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் வழங்குவதற்காக இன்றைய தினம் அளிக்கின்றேன்.
2004-2005 ஆம் ஆண்டுகளில் இதுபோலவே நான் எழுதிய "கண்ணம்மா'' திரைப்படத்திற்கான 10 லட்சம் ரூபாயையும், "மண்ணின் மைந்தன்'' திரைப் படத்திற்கான 11 லட்சம் ரூபாயையும் ஆக மொத்தம் 21 லட்சம் ரூபாயை "சுனாமி'' நிவாரண நிதிக்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் என் மகன் மு.க.ஸ்டாலின் மூலமாக வழங்கினார்.
அதேபோலவே இப்போது இந்த "உளியின் ஓசை'' திரைப்படத்திற்கு கிடைத்த தொகையையும், திரைப்படத்துறையைச் சேர்ந்த நலிந்த தொழில் நுட்பக் கலைஞர்களுக்காவே அளித்துள்ளேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.