Publish Date: Tue, 08 Jul 2008 (20:05 IST)
Updated Date: Tue, 08 Jul 2008 (20:05 IST)
கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் ஆர்.கே. செல்வமணி. அதன்பிறகு அவர் இயக்கிய செம்பருத்தி, புலன் விசாரணை ஆகியனவும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
அப்புறம் கொஞ்ச காலம் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார். பின், தன் தம்பி பெயரில் பொட்டு அம்மன் என்ற படத்தை இயக்கினார். கணக்குப்படி அவரின் மனைவி ரோஜா நடிக்கும் 101வது படம் என்றாலும் 100வது படம் என்று விளம்பரம் செய்தும், படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை. அதில் ஏகப்பட்ட பண நஷ்டம்.
சமீபத்தில் புலன் விசாரணை-2 என்று பிரசாந்தை வைத்து புலன் விசாரணை இரண்டாவது பாகமாக எடுத்தார். அந்தப் படமும் சரியாக ஓடவில்லை. மீண்டும் படம் இயக்குவதென்றால் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு இயக்க வேண்டும் என எண்ணியவர், தற்போதைய ஹாலிவுட் யூனிவர்சல் ஸ்டுடியோவில் தொழில் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.
தொழில் பயிற்சி முடிந்து வந்ததும் ஆந்திராவில் ஒயின் ஷாப்பை மூடச் சொல்லி போராட்டம் செய்து கலக்கிக் கொண்டிருந்த உங்கள் ரோஜா பற்றியே ஒரு கதையை எழுதி படம் எடுங்கள் படம் பிய்த்துக்கொண்டு ஓடும். வாழ்த்துக்கள்.