Publish Date: Tue, 01 Jul 2008 (18:59 IST)
Updated Date: Tue, 01 Jul 2008 (18:58 IST)
54 வருடங்களாக ஃபிலிம்ஃபேர் விருதுகள் இந்தியத் திரைத் துறையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தி திரைப்படங்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டன.
இப்போது தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கிற்கும் ஒரே மேடையில் விருது வழங்குகிறார்கள். 55வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஜூலை 12 நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது. விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நடிகர்கள், படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் சிறந்த நடிகருக்கான விருது போட்டியில் ரஜினி (சிவாஜி), அஜித் (பில்லா), விஜய் (போக்கிரி), சத்யராஜ் (ஒன்பது ரூபாய் நோட்டு), கார்த்தி (பருத்தி வீரன்) ஆகியோர் உள்ளனர்.
நடிகைகளுக்கான பரிந்துரை பட்டியலில் மொழி ஜோதிகா, பருத்திவீரன் ப்ரியாமணி, கல்லூரி தமன்னா, பில்லா நயன்தாரா, ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களில் யார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது விருது வழங்கும் மேடையில்தான் தெரியவரும் என்பதே ஃபிலிம்ஃபேர் விருதின் சுவாரஸ்யம்!