Publish Date: Sat, 14 Jun 2008 (17:27 IST)
Updated Date: Sat, 14 Jun 2008 (17:27 IST)
கே.வி. குணசேகரன் என்ற தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்திருக்கிறார் சிம்ரன். இது தற்கொலை செய்து கொண்ட மோனலுக்காக சிம்ரன் செலுத்திய தொகை.
கே.வி. குணசேகரன் தனது படத்தில் நடிப்பதற்காக சிம்ரனின் தங்கை மோனலுக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்தார். திடீரென்று மோனல் தற்கொலை செய்ய அந்த ப்ராஜெக்டே கைவிடப்பட்டது.
அக்கா என்ற முறையில் மோனலிடம் கொடுத்த எழுபத்தைந்தாயிரத்தை திருப்பித் தருவதாக வாக்களித்தார் சிம்ரன். ஆனால், குணசேகரன் நடையாக நடந்தும் சிங்கிள் பைசா பெயரவில்லை சிம்ரனிடமிருந்து. கல்யாணம், குடும்பம் குழந்தை என சிம்ரன் செட்டிலாக குணசேகரனும் ஓய்ந்து போனார்.
இந்நிலையில் சிம்ரன் மீண்டும் அரிதாரம் பூச, போராட்ட ஆயுதத்தை கையிலெடுத்தார் குணசேகரன். பிரச்சனை தயாரிப்பாளர்கள் சங்கம் செல்ல, அவர்கள் சிம்ரனை அழைத்து அறிவுரை சொன்னதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து எழுபத்தைந்தாயிரத்தில் பாதி பணத்தை முதல் தவணையாக தந்திருக்கிறார் சிம்ரன். மீதி பணமும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் குணசேகரன்.