Publish Date: Fri, 13 Jun 2008 (16:26 IST)
Updated Date: Fri, 13 Jun 2008 (16:26 IST)
ஹாரிஸ் ஜெயராஜை இசையமைப்பாளராகப் போட்டால் தவணை முறையில்தான் பாடல் வாங்க வேண்டியிருக்கிறது என சலித்துக் கொள்கிறார்கள் இயக்குனர்கள்.
சத்யம் படத்திற்கு நடிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட் சென்ற பிறகு இரண்டிரண்டு வரிகளாக பாடலை சென்னையில் இருந்து அனுப்பி வைத்தார் ஹாரிஸ். சத்யம் பரவாயில்லை. தவணை முறையிலாவது பாடல் கிடைத்தது. கே.வி. ஆனந்தின் அயன் படத்துக்கு அதுகூட வாய்க்கவில்லை.
அயன் படத்தின் சேஸிங் காட்சியை எடுக்க மலேசியா சென்றனர். அப்படியே ஒரு பாடல் காட்சி எடுப்பதாகவும் திட்டம். பிளைட் ஏறும் வரை பாடலை கொடுக்கவில்லை ஹாரிஸ். சரிதான் என்று சேஸிங் காட்சியை எடுத்தனர்.
இடையில் கன மழை பெய்ய, ஷூட்டிங் நடத்த திட்டமிட்ட சாலையெல்லாம் வெள்ளம். அது வடிய இரண்டு நாளாகும், பாடல் காட்சியை எடுக்கலாம் என்றால், கம்போஸிங் முடியவில்லை என கைவிரித்துள்ளார் ஹாரிஸ்.
இத்தனை தாமதத்திற்குப் பிறகும் ஹாரிஸை சகித்துக்கொள்ள காரணம், பாடலின் தரம். இதில் காம்ப்ரமைஸே செய்வதில்லை ஹாரிஸ் ஜெயராஜ்.