Publish Date: Thu, 12 Jun 2008 (13:21 IST)
Updated Date: Thu, 12 Jun 2008 (13:20 IST)
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தசாவதாரம்' படத்துக்கு தடை விதிக்க கோரி 'இன்டர்நேஷனல் ஸ்ரீவைஷ்ணவ தர்மா சம்ரட்சணா' சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது. சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையிலான மோதலை சித்தரிப்பதாக இந்தப் படம் அமைந்துள்ளது. சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையேயான மோதலை சித்தரிக்கும் காட்சிகளையும், மத உணர்வுகளை புண்படுத்தும் வேறு சில காட்சிகளையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் பி.பி.நவ்லேகர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனுதாரர்கள் முதலில் படத்தை முழுமையாக பார்க்க வேண்டும். அதன் பிறகே தங்களது கருத்தைத் தெரிவிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி, தசாவதாரம் படத்துக்கு தடைவிதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.