Publish Date: Fri, 06 Jun 2008 (19:46 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:44 IST)
கலையிலேயே களை கட்டியது ஏவி.எம். ஸ்டுடியோ. நான்கு படங்களின் பூஜை என்றால் சும்மாவா!
ஒருபுறம் ஷாமின் அகம்புறம் படப்பூஜை. அடுத்த அடி எடுத்து வைத்தால் அது சாமியின் சரித்திரம் படப்பூஜை. ராஜ்கிரண், ஆதி என மிரட்டிக் கொண்டிருந்தார். இன்னும் சற்று தள்ளிப்போனால், சேரநாட்டு சோலையிலே. அவ்வளவும் புதிய முகங்கள். அழைப்பிதழில் பெயர் போட்ட யாரும் வராமலே நடந்து முடிந்த பூஜை என்றால், அது எஸ். பாலாஜி என்பவரின் தெய்வமகன் படத்தின் பூஜை.
பழைய படங்களின் பெயரை பயன்படுத்தும்போது, முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். தெய்வமகன் யூனிட் வாங்கவில்லை. மேலும், நடிகர் திலகத்தின் சாதனைப் படங்களில் ஒன்று தெய்வமகன். அந்தப் படப் பெயர் தெரியாத புதுகத்தின் படத்துக்கா என்ற நியாயமான கோபம். தயாரிப்பாளருக்கு படத்தின் பெயரை மாற்றாமல் வேறுவழியில்லை.
மிஷ்கினின் நந்தலாலா தொடக்கவிழா நடந்தது க்ரீன் பார்க் ஹோட்டலில். படத்தில் மொத்தம் மூன்றே கேரக்டர்கள்தானாம். அதனால் மூன்று பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருப்பார் போல. மருது, விஜயலஷ்மி என ஒன்றிரண்டு பேரைத் தவிர விழா நடந்த அரங்கில் வேறுயாருமில்லை.
விஜயின் வில்லும், கரணின் மலையனும் விழா என்று சொல்லி நேரத்தை வீணடிக்காமல் நேராக படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டனர்.
ஒரே நாளில் ஏழு படங்கள் தொடங்கப்பட்டதால், தமிழ் சினிமாவின் ஏழரை இத்தோடு ஒழிந்தது என குதூகலிக்கின்றனர் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.