Publish Date: Wed, 04 Jun 2008 (20:11 IST)
Updated Date: Wed, 04 Jun 2008 (20:11 IST)
குஷ்புவுக்கும், சர்ச்சைக்கும் அப்படி ஒரு பொருத்தம். ஏதேனும் சர்ச்சையில் சிக்காவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது. ஏற்கனவே 'கற்பு' பற்றி பேசி கண்டனத்துக்கு ஆளாகி பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இன்று வரை கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கிறார்.
அதன்பின் 'பெரியார்' படத்தில் மணியம்மை கேரக்டரில் இவர் நடிக்க ஒப்புக்கொள்ள, ஏகப்பட்ட விமர்சனங்கள், அதையும் தாண்டி அந்தப் படத்தில் நடித்தார். இவர் நடிக்கும் காட்சிகளை நான் எடுக்கமாட்டேன் என்று தங்கர்பச்சான் கிரேனைவிட்டு கீழே இறங்கிப் போயேவிட்டார். அவரின் உதவியாளரை வைத்து குஷ்பு வரும் காட்சிகளை படம் பிடித்தார்கள்.
அதேபோல், மிருகம் படத்தில் பத்மப்ரியாவை இயக்குனம் சாமி அறைந்துவிட்ட விவகாரம் நடிகர் சங்கத்துக்கு வர, பத்மப்ரியாவுக்கு ஆதரவாக இருந்தவர்களில் குஷ்பு முக்கியமானவராக இருந்தார்.
இப்படி இருக்கையில் தற்போது மூத்த நாயகர்களை வம்புக்கு இழுத்துள்ளார் குஷ்பு. 'வயதான சில ஹீரோக்கள் தன் வயதுக்கு பாதி வயது உள்ள இளம் ஹீரோயின்களை மட்டுமே ஜோடியாக போடவேண்டும் என்று எழுதாத ஒப்பந்தம் செய்கிறார்கள். அதுமட்டுமின்றி ஒரு நடிகைக்கு திருமணம் நடந்துவிட்டால் ரசிகர்கள் வெறுக்கிறார்களோ இல்லையோ இந்த மூத்த நடிகர்கள் ஜோடியாக ஏற்க மறுக்கிறார்கள். தமிழ் சினிமாவில் மட்டும்தான் இந்த அவல நிலை. இந்தியில் அப்படியில்லை. இங்கே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஹீரோக்களக்கு வயதாவதே இல்லை' என்று குரல் கொடுத்துள்ளார்.
அடுத்த பரபரப்பு செய்திகளுக்கு தயாராகிவிட்டது பத்திரிக்கை உலகம். கூத்தாடிகள் ரெண்டுபட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று மாறிவிட்டது தமிழ் சினிமா உலகம்.