Publish Date: Tue, 03 Jun 2008 (19:58 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:55 IST)
'தொட்டால் பூ மலரும்' படம் மூலம் தன் மகன் ஷக்தியை ஹீரோவாக்கினார் இயக்குநர் பி.வாசு. படம் நன்றாகப் போனதுடன், ஷக்தியும் முதல் படத்திலேயே தன் நடிப்புத் திறமையை நிரூபிக்க, தொடர்ந்து படங்கள் வரத் துவங்கின.
'தொட்டால் பூ மலரும்' படம் காதல் கதைதான் என்றாலும் காமெடியும் நல்லபடியாக அமைந்ததால் அடுத்தடுத்த படங்களும் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தால்தான் மக்கள் மனதில் எளிதாகப் பதிய முடியும் என்று பி.வாசு அறிவுரை சொல்ல, அதன்படியே கதைகளையும் கேட்டார் ஷக்தி.
அதன்படி தற்போது இயக்குநர் விக்ரமனின் உதவி இயக்குநர் ரவி இயக்கும் 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடி சந்தியா. இதற்கடுத்த படமும் வின்ரமனின் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை ஷக்தியை ஹீரோவாக்கி நடிக்கவுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'ஆட்டநாயகன்' படத்திலும் நடிக்கிறார். இவையெல்லாமே காமெடி கலந்த கதைகள்தானாம்.
இப்படியே தனது மகன் நடித்துக் கொண்டிருந்தால் காமெடி நடிகனாகிவிடுவான் என்ற பயத்தில் ஷக்தியை வைத்து ஒரு அதிரடியான ஆக்ஷன் படத்தைத் தயாரித்து இயக்கவுள்ளார் பி.வாசு. அதனால்தான் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'குசேலன்' படம் முடிவடைந்ததும் தன் மகன் படத்தை ஆரம்பிக்க உ ள்ளார்.
எத்தனையோ ஆக்ஷன் ஹீரோக்களை கொடுத்த பி.வாசு தன் பிள்ளையை காமெடி நடிகராகவா விடுவார்? அதற்காகத்தான் இந்தியில் ஷாரூக்கான் நடித்து சூப்பராக ஓடிய 'பாசிகர்' கதையை வாங்கியுள்ளார்.