Publish Date: Thu, 29 May 2008 (19:47 IST)
Updated Date: Thu, 29 May 2008 (19:47 IST)
பிரச்சனை புட்டிக்குள் அடைபட்டிருந்த பிரசாந்த் நேற்று கொட்டி தீர்த்துவிட்டார். விடுதலையின் குதூகலத்தை விட புறக்கணிப்பின் சோகமே நேற்றைய அவர் பேச்சில் பிரதிபலித்தது.
பிரசாந்த் மீது அவரது மனைவி கிரகலட்சுமி வரதட்சணை கொடுமை புகார் கொடுத்திருந்தார். இதனை விசாரித்த வரதட்சணை தடுப்பு போலீசார் தங்கள் விசாரணை அறிக்கையை இரண்டு நாள் முன்பு சமர்ப்பித்திருந்தனர்.
750 பக்க அறிக்கையின் சாராம்சம், கிரகலட்சுமி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், கற்பனையானவை. பிரசாந்த் மீது எந்த தவறும் இல்லை!
கேரியரையும், கெளரவத்தையும் கேள்விக்குறியாக்கிய வழக்கில் தனது களங்கமின்மை நிரூபிக்கப்பட்டதை நேற்று பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் பிரசாந்த். விவாகரத்து வேண்டுமென்றால் ஐம்பது கோடி தரவேண்டும் என்று கிரகலட்சுமியின் சகோதரர் மிரட்டியதாகவும் தெரிவித்தார் பிரசாந்த்.
அவரது ஒரே கவலை, தனது குழந்தை. அது தவறான இடத்தில் வளர்கிறது. குழந்தையை தன்னிடம் வைத்துக்கொள்ள சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்திடம் பிரகாசம் திரும்பியிருக்கிறது.