Publish Date: Mon, 12 May 2008 (15:12 IST)
Updated Date: Mon, 12 May 2008 (15:12 IST)
கே.ராஜேஷ்வரின் இந்திர விழா முக்கால்வாசி முடிந்து விட்டதாம். பாடல் காட்சிகளை எடுத்தால் படம் முடிந்து விடும். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ராஜேஷ்வர் பகிர்ந்து கொண்ட தகவல் இது.
தொலைக்காட்சியில் வேலை பார்ப்பதற்காக நடிக்கிறாராம் சிறிகாந்த். நமிதாவுக்கு நவநாகரிக யவுதி வேடம். நினைத்ததை அடைய உடம்பை மூலதனமாக்கவும் தயங்காத கேரக்டராம். போஸ்டரைப் பார்க்கும் போதே பொங்குகிறது வெப்பம்.
ரகுவரன் இந்திரவிழாவில் நடிப்பதாக இருந்தது. இருபது நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று ராஜேஷ்வரிடம் கூறியிருக்கிறார். அவர் சொன்னதற்காக, ரகுவரன் இல்லாத காட்சிகளை ஷூட் செய்திருக்கிறார்கள். இருபது நாள் ஆவதற்குள் அவரது இறப்பு செய்திதான் கிடைத்திருக்கிறது. இப்போது ரகுவரனுக்குப் பதில் நடித்திருப்பவர் நாசர்.
குஷ்பு கற்பு குறித்து பேசியதால் ஏற்பட்ட பின்விளைவுகள்தான் கதையா என்று கேட்டதற்கு, இல்லை என்றார் ராஜேஷ்வர். மேல் தட்டு மக்களின் வாழ்க்கை முறை, பாலியல், உறவு சிக்கல்தான் இந்திரவிழா என்றார்.
உடல் சார்ந்த உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் திரைப்படங்கள்தான் இப்போதெல்லாம் வருகிறது. என் படம் உடலை தாண்டி அறிவையும் மனதையும் தொடும் என்றார் ராஜேஷ்வர்.
நமிதா அதற்கு அனுமதிப்பாரா என்பதுதான் கேள்விக்குறி!