Publish Date: Sat, 26 Apr 2008 (20:18 IST)
Updated Date: Sat, 26 Apr 2008 (20:18 IST)
இருபதுக்கு20 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பட்டையைக் கிளப்பி வருகிறது. எட்டு அணிகள் மோதும் இதில் உலக கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர். பகையான விளையாட்டு வீரர்கள் நண்பர்களாகவும், நண்பர்கள் எதிரிகளாக எதிர் அணியில் விளையாடி வருகிறார்கள்.
இதில் இந்திய கேப்டன் டோனியின் தலைமையிலான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இதன் நட்சத்திர தூதர்களாக நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன் அணிக்கும் கடந்த 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் மற்றும் டிரம்ஸ் சிவமணி, நடன கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
ஆனால் நட்சத்திர தூதராக விளையாட்டுப் போட்டியின் போது ரசிகர்ளை உற்சாகப்படுத்த நியமிக்கப்பட்ட நயன்தாரா வரவில்லை. விஷாலுடன் 'சத்யம்' படத்துக்காக ஜோடி சேர்ந்து இடைவிடாது படப்பிடிப்பில் கலந்துகொண்டதோடு, குசேலன் படத்திலும் நடன காட்சியில் கலந்துகொண்டதோடு படப்பிடிப்பில் மயங்கி விழுந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.
இதனால் கோபமடைந்த ஐ.பி.எல். அமைப்பினர், நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட 40 லட்ச ரூபாயை திருப்பிக் கேட்டதோடு, நட்சத்திர தூதராக இருந்தும் நீக்கப்பட்டார். அத்தோடு அந்த இடத்திற்கு நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்படி நயன்தாரா நீக்கப்பட்டு த்ரிஷாவை நியமித்ததற்கு விஜயின் சிபாரிசும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்.