Publish Date: Fri, 25 Apr 2008 (19:05 IST)
Updated Date: Fri, 25 Apr 2008 (19:04 IST)
பல ஹீரோக்களிடம் கதை சொல்லி யாரும் நடிக்க முன்வராத நிலையில் விஷால் நடிப்பதாக ஒப்புக்கொண்டு நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்தான் 'திமிரு'. இதன் இயக்குனர் தருண்கோபி.
திமிரு படப்பிடிப்பின் போதே இவருக்கு சரியாக ஷாட் வைக்கத் தெரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் திணறி வருகிறார் என்றும், மேற்கொண்டு படத்தை இனி விஷாலே இயக்கப் போகிறார் என்றும் பேசிக் கொண்டார்கள்.
அதேபோல், அப்படத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஸ்ரேயா ரெட்டியின் காட்சிகளை விஷால்தான் ஷூட் செய்தார், அதனால்தான் படம் வெற்றி பெற்றது என்றும் பேச்சு அடிபட்டது.
அதற்குப் பின் சிம்புவை வைத்து 'காளை' படத்தை இயக்கினார் தருண்கோபி. அப்போதும் சிம்புதான் படத்தை இயக்கி வருகிறார் என்றார்கள் சினிமா மக்கள். பல பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி வெளியானது.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் 'காட்டுப்பய' என்றொரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் தருண்கோபி. அப்படி எடுக்கப்படும் படத்தில் என் திறமையை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று விஷாலுக்கும், சிம்புவுக்கும் மறைமுகமாய் சவால் விடும் படம்தான் இந்த 'காட்டுப்பய'.
ஆனாலும் தருண்கோபி நடிக்கத்தான் சென்னை வந்தார். சூழ்நிலை இயக்குனராக்கியது. அதனால்தான் இந்த ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.