Publish Date: Fri, 25 Apr 2008 (18:48 IST)
Updated Date: Fri, 25 Apr 2008 (18:48 IST)
இன்றைக்கும் சிங்கம்போல் எழுத்துலகில் வலம் வந்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். எதையும் தைரியமாக எழுதவும், பேசவும் தயங்காதவர். இவருடைய பல கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டது.
அதேபோல, சிறுகதை எழுதுவதிலும் இவரைப் போல வேறு யாருமில்லை என்றே சொல்லலாம். பல இளம் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இருந்துவரும் ஜெயகாந்தன் பற்றி ஆவணப்படம் மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்துகொண்டு ஆவணப் படத்தின் கேசட்டை வெளியிட, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.
காலத்தை தாண்டி நிற்கும் எழுத்துக்களை எழுதக்கூடியவர் ஜெயகாந்தன் அவர்கள். அவரின் கட்டுரைகளாகட்டும், சிறுதைகளாகட்டும், நாவலாகட்டும் அனைத்திலும் ஒரு புரட்சி இருக்கும். ஒரு நியாயம் இருக்கும் என்று அப்துல் கலாம் புகழாராம் சூட்டினார்.
மேலும் ஏராளமான எழுத்தாளர்களும், வாசகர்களும் கலந்துகொண்டனர். இவ்விழா நல்லி குப்புசாமியின் மேற்பார்வையில் பிரம்ம கான சபா ஏற்பாடு செய்திருந்தது.