Publish Date: Wed, 23 Apr 2008 (20:12 IST)
Updated Date: Wed, 23 Apr 2008 (20:12 IST)
தமிழ், மலையாளத் திரைப்படங்களை எல்லாம் ஓரம்கட்டி வைத்து இந்தி பட உலகத்தில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக்கொண்டார் அஸின். இந்தியில் கஜினி படம் மிகப்பெரிய அளவில் பேசப்படப்போகிறது. சம்பளமும் கோடிக் கணக்கில் உயரப்போகிறது என்று தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார். இதற்காக தமிழ், மலையாளம் என பல படங்களை தவிர்த்தார்.
இதற்கிடையே ஒகேனக்கல் பிரச்சனைக்காக கடந்த 4 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அஸின் கலந்துகொள்ளவில்லை. இதில் கலந்துகொள்ளாத பல ஜாம்பவான்களும், கலந்துகொள்ள முடியாததற்கான காரணம் சொல்லி, கடிதம் அனுப்ப, அஸின் மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. காரணம் இந்தி படவுலகின் கனவில்தான். அதனால் அவர் தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், அஸினுக்கு சில பெரிய நடிகர்கள், நடிகர் சங்கத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும், நடிகர் சங்கம் ஏற்க மறுத்துவிட்டது. அப்படி எனக்கு தடை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக பேசி வருகிறார் அஸின். யார் கொடுக்கும் தைரியமோ தெரியவில்லை.