Publish Date: Mon, 14 Apr 2008 (18:03 IST)
Updated Date: Mon, 14 Apr 2008 (18:02 IST)
முதல்வரிசை ரசிகர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை ஒரு நடிகரை ரசிப்பது என்பது சாதாரண விஷயமில்லை.
முன்பு எம்.ஜி.ஆரை அப்படி ரசித்தார்கள். பிறகு ரஜினி. இப்போது அந்த இடத்தைப் பிடித்திருப்பவர் இளைய தளபதியாக வலம் வரும் விஜய்!
சமீபத்தில் தெற்கு ஆஸ்ட்ரேலியப் பிரதமர் மைக் ரான் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். அப்போது சென்னையில் நடந்த தென்னிந்தியத் தொழில் வர்த்தகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
இருநாடுகளுக்கு இடையே தொழில், வர்த்தக உறவுகள் செழிக்க வேண்டும் என்றால் பண்பாட்டுப் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்றவர், சென்னையை வெகுவாகப் புகழ்ந்தார். குறிப்பாக நடிகர் விஜய்யை.
தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரத்துடன் வெளிவருவதாகக் கூறிய அவர், தானொரு விஜய் ரசிகர் என்றார் உற்சாகமாக. அவருடைய படங்களைப் பார்க்கும்போது, அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை தோன்றுவதாகக் கூறி உணர்ச்சிவசப்பட்டார் மைக் ரான்.
அவரின் பேச்சைக் கேட்ட தென்னிந்தியத் தொழில் வர்த்தகச் சபைத் தலைவர் ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம், "விஜய்யின் அடுத்த படத்தை நான்தான் தயாரிக்கிறேன். ஆஸ்ட்ரேலியாவிற்குப் படப்பிடிப்பிற்கு வந்தால் நிச்சயம் உங்களை அவருடன் நடிக்க வைக்கிறேன்" என்று மைக் ரானின் ஆசைக்கு உடனே ஒப்பிதல் தந்தார்.