Publish Date: Thu, 03 Apr 2008 (18:41 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:49 IST)
நூறு பேர் அமரும் மேடை, பத்தாயிரம் பேர் அமரும் பந்தல். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் பிரமாண்டமாக தயாராகிறது தமிழ்த் திரையுலகினரின் உண்ணாவிரத மேடையும், பந்தலும்.
கன்னட அமைப்பினரின் வன்முறையை கண்டித்து நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி முதல் குள்ளமணி வரை அனைத்து நடிகர்களும் கலந்துகொள்வார்கள் என தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி. கூறினார்.
கன்னட நடிகர்களான பிரகாஷ் ராஜ், அர்ஜுன், பிரபுதேவா ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். ரஜினி கலந்துகொள்வது பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. சரத்குமாருடன் கலந்து பேசிவிட்டு முடிவு கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் கமல், கண்டிப்பாக கலந்துகொள்வேன் எனக் கூறியிருக்கிறார்.
தமிழ்த் திரையுலகினரின் உண்ணாவிரதத்திற்குப் போட்டியாக கன்னடத் திரைத் துறையினரும் நாளை போட்டி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
தமிழகத்தில் பதட்டம் நிலவுவதால் ரஜினிகாந்த் உட்பட கன்னட நடிகர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.