Publish Date: Mon, 25 Feb 2008 (19:11 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (19:11 IST)
சின்ன மைதானம், அதில் பல்லாயிரம் ரசிகர்கள். தள்ளு முள்ளுக்கு கேட்கவா வேண்டும். சின்னதாக தடியடி நடத்தித்தான் ரசிகர்களை கலைக்க வேண்டியிருந்தது போலீசாருக்கு!
ஈரோடு மாவட்டம் விஜய் தலைமை நற்பணி மன்றமும், தலைமை இளைஞர் நற்பணி மன்றமும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த விஜய் மன்ற விழாவில்தான் இந்த களேபரம். மாலை ஐந்து மணிக்கு விஜய் விழாவிற்கு வருவதாக கூறியிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயைக் காண விழா நடக்கும் ஈரோடு தனியார் பள்ளி மைதானத்தில் மதியம் முதலே வரத்தொடங்கினர்.
விஜய் மேடையேறிய போது மைதானம் நிரம்பி, வெளியேயும் கட்டுக்கடங்காத கூட்டம். விஜயை அருகில் பார்க்க தடுப்பு வேலியையும் தாண்டிவர முற்பட்டனர் ரசிகர்கள். இதனால் போலீஸார் சின்னதாக தடியடி நடத்த வேண்டியிருந்தது.
எதிர்பார்க்காத இந்த திடீர் சிக்கலால்¨, அரசுப் பள்ளிகளுக்கு இலவச கணினி, ஏழைகளுக்கு தையல் எந்திரங்கள், இஸ்திரி பெட்டி என நல உதவிகளை மட்டும் வழங்கிவிட்டு நடையைக் கட்டினார் இளைய தளபதி¨. விழாவில் அவருடன் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் கலந்துகொண்டார்.