Publish Date: Mon, 25 Feb 2008 (16:58 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (16:58 IST)
''தற்போது அரசியலில் குதிக்க தயாராக இல்லை. விரைவில் ரசிகர் மன்றத்துக்கான கொடியை மட்டும் அறிமுகம் படுத்தப்படும்'' என ஈரோட்டில் நடிகர் விஜய் நற்பணி மன்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசினார்.
ஈரோட்டில் மாவட்ட தலைமை இளையதளபதி விஜய் தலைமை இளைஞர் அணி நற்பணி மன்றம், தலைமை இளைஞர் அணி நற்பணி மன்றம் சார்பில் ஈரோட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், ஈரோடு மாவட்ட ரசிகர்களிடம் இருந்து எனக்கு அதிக கடிதம் வருகின்றன. தமிழகத்தில் எனக்கு ஈரோட்டில் தான் முதலில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது. ஆகவே ஈரோடு எனக்கு முக்கிய நகரமாக உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் நடிக்கும் படத்தில் சிகரெட் குடிக்க கூடாது என கூறினர். நல்ல விஷயங்களை யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்வேன்.
ஆக் ஷன், காமெடி, காதல் அனைத்தும் ஒன்று சேர்ந்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது குடும்பத்தில் மனைவி, மகன் இருவரின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களது ஃபோட்டோவை இதுவரை வெளியிடவில்லை. அவனுக்கு நான் நடித்த படங்கள் ரொம்ப பிடிக்கும். அரசியல் என்ற கடலில் நீந்த தெரிந்தாலும் இப்ப நான் அதில் குதிக்க தயாராக இல்லை. எனது ரசிகர் மன்றத்துக்காக மட்டும் விரைவில் கொடியை அறிமுகம் செய்ய உள்ளேன் என்று நடிகர் விஜய் கூறினார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர், பொதுமக்களுக்கிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டதால் சற்று நேரம் சல சலப்பு ஏற்பட்டது. இதனால் நடிகர் விஜய் நிகழ்ச்சியை விரைவில் முடித்துக்கொண்டு சென்றார்.