Publish Date: Sat, 16 Feb 2008 (19:11 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)
'தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஜாக்கி சான் கலந்து கொள்கிறார். ஹாங்காங் சென்று ஜாக்கி சானை சந்தித்துவிட்டு வந்த தயாரிப்பாளர் ரமேஷ் பாபு இந்த தகவலை நேற்று உறுதி செய்தார்.
ஜாக்கி சானின் ஆரம்பகால படங்களை இந்தியாவில் விநியோகித்தவர்கள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது தம்பி தயாரிப்பாளர் ரமேஷ் பாபு. அப்போதே இருவருக்கும் ஜாக்கி சானுடன் நல்ல அறிமுகம் இருந்தது. சென்னை திரையரங்கில் ஜாக்கி சானின் 'ஆர்மர் ஆ·ப் தி காட்' போன்ற படங்கள் வெளியான போது ரசிகர்கள் திரையரங்கில் காசை அள்ளி வீசும் வீடியோ காட்சியைப் பார்த்து சென்னையில் எனக்கு இத்தனை ரசகர்களா என ஜாக்கி சான் ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கி சானை அழைக்க ரமேஷ் பாபு ஹாங்காங் சென்றார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் பத்து வேடங்களின் கிளப்பிங்ஸ்கள் அவருக்கு போட்டுக் காண்பித்தார் ரமேஷ் பாபு. அதனைப் பார்த்து வியந்த ஜாக்கி சான் இசை வெளியீட்டு விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்ததுடன் அன்று இரவு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து தனது சென்னை வருகையை நண்பர்களிடமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தத் தகவல்களை நேற்று நிருபர்களுடன் பகிர்ந்து கொண்ட ரவிச்சந்திரன், அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
இந்தி நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ஏற்கனவே தங்கள் சம்மதத்தை தெரிவித்துள்ளனர். தேதி முடிவானதும் உபேந்திரா, சிரஞ்சீவி, மோகன் லால், மம்முட்டி ஆகியோரை விழாவிற்கு அழைக்கவும் முடிவு செய்துள்ளனர்.