Publish Date: Fri, 08 Feb 2008 (19:35 IST)
Updated Date: Fri, 08 Feb 2008 (19:35 IST)
கலைத் துறைக்கும், வருமான வரித்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாகிஸ்தான், இந்தியா எல்லைப் பிரச்சனை போல் எப்போதும் பிரச்சனைகளுடன் இருக்கும் உறவு. இதனை சுமூகமாக்க சென்னை ஃபிலிம் சேம்பரில் நேற்று கூட்டம் நடந்தது.
தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து எஸ்.ஏ. சந்திரசேகரன், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளும் இதில் பங்கு பெற்றனர்.
வருமான வரித்துறை ஆணையர் ஆல்பர்ட், திரைத் துறையினரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
கூட்டம் முடிந்தபின் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்து, திரைத் துறையினரின் வேண்டுகோளை ஏற்று, தினம் 200 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் லைட்ஸ்மேன்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றார். மேலும், படம் தயாரித்து நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் அதற்கான கணக்குகளை சமர்ப்பித்து வரி விலக்கு பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த வரி விலக்கு லட்சங்களில், கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பொருந்தாது.