Publish Date: Mon, 14 Jan 2008 (12:34 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (12:33 IST)
''சிவாஜி பட விழாவுக்கு ஆபாச உடை அணிந்து வந்த நடிகை ஸ்ரேயா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சிவாஜி படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சியாக குட்டை பாவாடை அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி மேடையில் அமர்ந்திருந்த அவர், குட்டை பாவாடை உடையுடன், கால், மேல் கால், போட்டு உட்கார்ந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவுக்கு எதிராக குரல் எழுப்பினர். இதை பார்த்த அவர் ஒழுங்காக உட்கார்ந்து கொண்டார்.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சி பிரமுகர் ராமமூர்த்தி என்பவர், சென்னை அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், அண்மையில் நடந்த சிவாஜி படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை ஸ்ரேயா, கவர்ச்சிகரமான உடை அணிந்து வந்ததை, பத்திரிகைகளில் பார்த்து மனது பாதிக்கப்பட்டது. பொது நிகழ்ச்சிக்கு ஆபாச உடை அணிந்து வந்த அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகார் மனுவை பதிவு செய்து கொண்டு, காவல்துறையினர் சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று, அண்ணா சதுக்கம் காவல் ஆய்வாளர் இளங்கோ உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.