Entertainment Film Article 0812 18 1081218016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு புதன்கிழமை – முட்டாள் பொது மக்களின் குமுறல்!

Advertiesment
A Wednesday ஒரு புதன்கிழமை நீரஜ் பாண்டே பொதுமக்கள் அனுபம் கெர் நஸ்ருதீன் ஷா
இந்தியாவில் பெருகிவரும் பயங்கரவாதத்தைப் பற்றி பேசுகிறது, நீரஜ் பாண்டேயின் ஒரு புதன்கிழமை. தினந்தோறும் வெடிக்கும் குண்டுகள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பதட்டம் நிறைந்ததாக மாற்றியுள்ளது. கூட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்குச் செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.

எந்த இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தாலும் முதலில் கொல்லப்படுகிறவர்கள் அப்பாவி பொதுமக்களாகவே இருக்கிறார்கள். பயங்கரவாதத்தை களைந்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சர்க்கார், கையறு நிலையில், பதவியை தக்க வைத்துக் கொள்ள காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறது.

வீட்டைவிட்டு கிளம்பினால் உயிரோடு திரும்பி வருவோமா என்ற உத்தரவாதமில்லாத அன்றாட வாழ்க்கையை வாய்க்கப்பெற்ற அப்பாவி பொதுமக்கள், இதுபோன்ற சூழலில் என்ன செய்வார்கள்? “எதுவும் என்கிறத” நீரஜ் பாண்டேயின் ஒரு புதன்கிழமை.
webdunia photoFILE

மும்பை காவல் ஆணையர் பிரகாஷ் ரத்தோருக்கு (அனுபம் கெர்) அனாமதேய போன் கால் வருகிறது. மும்பையின் ஐந்து இடங்களில் குண்டுகள் வைத்திருப்பதாக அந்த போன் கால் தெ‌ரிவிக்‌கிறது. அந்த குரலுக்கு‌உரியவர் (நஸ்ருதீன் ஷா) மும்பை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும், இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் என்கிறார். காவல்துறை பதற்றமடைகிறது.

குரலுக்கு‌ரியவரை தேடும் முயற்சியில் தோல்வியடையும் காவல்துறை நான்கு தீவிரவாதிகளையும் அவர் சொன்ன இடத்தில் விட்டு விடுகிறது. அந்த இடத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தீவிரவாதிகளை சாகடிக்கிறார் நஸ்ருதீன் ஷா.

கமர்ஷியல் சினிமாவான ஒரு புதன்கிழமையில் வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு‌ரிய அத்தனை இலக்கணங்களும் மீறப்பட்டுள்ளன. தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்துகிறவர் சூப்பர் ஹீரோ அல்ல. வயதான ஒரு சாதாரண குடிமகன். அனுபம் கெர்‌ரிடம் நஸ்ருதீன் ஷசொல்வதுபோல, ‘போலீஸைப் பார்த்து பயப்படும் ஒரு ஸ்டுபிட் காமன் மேன’. காதல், பாடல்கள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை பகுதிகள் அனைத்தும் இந்தப் படத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன. ஒரு நாளின் காலையில் தொடங்கி மாலையில் முடிகிறது படம்.

போலீஸ் கமிஷனர் அனுபம் கெர், நஸ்ருதீன் ஷா, சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், தொலைக்காட்சி நிருபர். இந்த ஐவருமே படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத இவர்களின் அன்றாட அலுவல்கள் படத்தில் காண்பிக்கப்படுகிறது. சாதாரண கமர்ஷியல் படமான ஒரு புதன்கிழமையை அசாதாரணமான படமாக மாற்றுவது இந்தக் காட்சிகள்தாம்.

அனுபம் கெர்‌ரின் அன்றைய நாள் இந்தி நடிகர் ஒருவருடன் தொடங்குகிறது. திரையில் சூப்பர் ஹீரோவாக வரும் அந்த நடிகர், பணம் கேட்டு தன்னை சிலர் போனில் மிரட்டுவதாகவும், எப்படியேனும் அவர்களிடமிருந்து காப்பாற்றும்படியும் அழுகிறான்.

சப் இன்ஸ்பெக்டர் ரயில் நிலையத்தில் தனது மனைவியையும், குழந்தையையும் வழியனுப்பி வைக்கிறார். அன்றைய தினம் முழுக்க மனைவியிடமிருந்து அவருக்கு போன் கால் வந்து கொண்டேயிருக்கிறது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பரபரப்பான சூழலிலும் மனைவியின் போனுக்கு பொறுப்பாக பதில் சொல்கிறார் அவர். தொலைக்காட்சியில், தீவிரவாதிகளை இடமாற்றம் செய்வது குறித்து பேட்டியளித்துவிட்டு, என்னுடைய மனைவி டி.வி. பார்த்துக் கொண்டிருப்பாள். எனவே இதுபோல் டி.வி.யில் பேசச் சொல்லாதீர்கள், அவள் பயப்படுவாள் என அனுபம் கெர்‌ரிடம் கூறுகிறார் அந்த சப் இன்ஸ்பெக்டர்.

இன்ஃபார்மராக மாறிய குற்றவாளியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ்காரன் ஒருவன், அந்த குடும்பத்து பெண்ணிடம் தவறாக நடக்கிறான். அவனை நடுத்தெருவில் அடித்து உதைக்கிறார், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான இன்ஸ்பெக்டர். இன்னொரு காட்சியில், வெடிகுண்டுகளை யாருக்கு சப்ளை செய்தாய் என அனுபம் கெர் லாக்கப்பில் ஒருவனை விசாரிக்கும்போது, எனக்கு தெ‌ரியாது என்று மறுப்பவன், அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டை பார்த்ததும் நிஜா‌ரில் ஒன்றுக்கு இருந்தபடியே, முகவ‌ரியை ஒப்பிக்கிறான்.
webdunia
webdunia photoFILE

துண்டு துண்டாக வரும் கதாபாத்திரங்களின் அன்றைய அலுவல்கள் வழியாக, கதாபாத்திரங்களின் குணாம்சங்களும், மும்பை மாநக‌ரின் நிழல் உலக யதார்த்தமும் இயல்பாக காட்சிப்படுத்தப்படுகிறது. செய்திகளுக்கான பகாசுர பசியுடன் அலையும் செய்தி சானல்கள், சாதாரண நிகழ்வை எப்படி பிரேக்கிங் நியூஸாக உருமாற்றுகின்றன என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார், நீரஜ் பாண்டே.

படத்தின் மையப்பகுதி என்றால் அது, நஸ்ருதின் ஷாவுக்கும், அனுபம் கெர்ருக்கும் இடையில் நடக்கும் தொலைபேசி உரையாடல். தீவிரவாதிகளை வெடிகுண்டை வெடிக்க வைத்து நஸ்ருதீன் ஷசாகடித்த பிறகே, அவரது நோக்கம் தீவிரவாதிகளை விடுவிப்பதல்ல, சாகடிப்பது என்பது தெ‌ரிய வருகிறது. ஏன் இப்படி செய்தீர்கள் என ஷாவிடம் போலீஸ் கேட்கிறது. ஷசொல்கிறார், “உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி நுழைந்தால் என்ன செய்வீர்கள்? சாகடிப்பீர்கள். இவர்களும் என்னுடைய வீட்டை நாசம் செய்கிறார்கள். நான் வீட்டை சுத்தம் செய்கிறேன்.”

நீங்கள் யார் என்ற கேள்விக்கு ஷஅளிக்கும் விளக்கம், ஒவ்வொரு சாமானிய மனிதனின் மனதிலும் நீண்டகாலமாக கொதித்துக் கொண்டிருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடு.

இப்போதெல்லாம் பேருந்திலோ, ரயிலிலோ பயணிக்க பயப்படுகிற சராச‌ரி ஜனங்களில் ஒருவன் நான் என பதிலளிக்கிறார் ஷா. வேலைக்கு கிளம்பும்போது போருக்கு போவதாக மனைவி பயப்படுகிறாள். நான் திரும்பி வரமாட்டேனோ என்று அவளுக்கு பயம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை டீ குடித்தீர்களா, லஞ்ச் சாப்பிட்டீர்களா என போன் வரும். நான் உயிரோடுதான் இருக்கிறேனா என்பதை தெ‌ரிந்து கொள்ளவே இந்த போன் கால்கள்.

ரயிலிலோ, பேருந்திலோ குண்டு வெடிப்பில் சாக சாத்தியமுள்ளவர்களில் நானும் ஒருவன். தாடி வளர்க்கவோ, தொப்பி வைக்கவோ பயப்படுகிறவர்களில் நானும் ஒருவன். ஒரு கடையை வாங்கினால், அதற்கு பெயரை தேர்வு செய்யவும் பயப்பட வேண்டியிருக்கிறது. கலவரத்தின்போது பெயருக்காகவே என்னுடைய கடை கொளுத்தப்படலாம். எந்த இருதரப்பு சண்டையிடுகிறது என்பது பொருட்டல்ல. கொல்லப்படும் முதல் ஆள் நான்தான்.

நான் இந்துவா, முஸ்லிமா என்று கேட்கிறீர்கள். I am a stupid common man.

தீவிரவாதத்தை தடுக்கத்தான் மக்கள் ஒரு சர்க்காரை நியமித்திருக்கிறார்கள். அரசு, காவல்துறை, உளவுத்துறை அனைத்துமே தீவிரவாதிகளை தடுப்பதில் தோற்றுவிட்டன. இந்த குப்பைகளை நீங்கள் அகற்ற தவறும்போது, நாங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது.

ரயில் குண்டு வெடிப்புகளை வெறும் தீவிரவாத செயலாக மட்டும் நான் பார்க்கவில்லை. அது ஒரு கேள்வி. நாங்கள் தொடர்ந்து மக்களை கொல்வோம். உங்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்டிருக்கிறார்கள். முதலில் வெள்ளிக்கிழமை இந்தக் கேள்வியை கேட்டார்கள். பிறகு செய்வாய்க்கிழமை. நான் புதன்கிழமை அதற்கு பதிலளித்திருக்கிறேன்.

எனக்கு எப்படி இந்த வெடிகுண்டுகள் கிடைத்தன என்று கேட்கிறீர்கள். இன்டெர்நெட்டில் bomb என்று டைப் பண்ணினால் இலவசமாக bomb செய்ய கற்றுத்தர நூற்றுக்கணக்கான சைட்கள் உள்ளன. சாதாரண வாஷிங் சோப்பை bomb ஆக பயன்படுத்தலாம் என்பதாவது உங்களுக்கு தெ‌ரியுமா?

உங்களுக்கு வேண்டியவர்கள் யாரேனும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்களா என்ற கேள்விக்கு ஷஅளிக்கும் பதிலைக் கேட்டு திரையரங்குகள் ஆர்ப்ப‌ரிக்கின்றன.

அந்தமாதி‌ி மோசமான சாவு ஏற்படும்வரை நான் காத்திருக்க வேண்டுமா? நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். தினமும் ரயிலில் அலுவலகம் செல்கிறவன் நான். அந்த நேரத்தில் என்னுடன் பயணிக்கும் அனைவருடனும் எனக்கு ஒருவித நட்பு இருக்கிறது. அவர்கள் பெயர்கள் எனக்கு தெ‌ரியாது.அதில் ஒரு இளைஞன் தினமும் என்னைப் பார்த்து ஹலோ சொல்வான். நான் பதிலுக்கு புன்னகை செய்வேன்.

அன்று அவன் தனது கையிலிருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டினான். நான் அவனுக்கு வாழ்த்து சொன்னேன். அன்று அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தான். மறுநாள் அந்த ரயிலில் குண்டு வைத்தார்கள். தாமதமாக போனதால் நான் பிழைத்துக் கொண்டேன். அந்த இளைஞன் இறந்து போனான். பிறகு அந்த ரயிலில் நான் பயணிக்க நேர்ந்த போது, எனக்கு அறிமுகமான எந்த முகமும் அதில் இல்லை. அந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் அந்நியர்கள்.

இழப்பின் வலியையும், உத்தரவாதமில்லாத வாழ்க்கைக்கு கையளிக்கப்பட்டிருக்கும் சாமானியனின் நெருக்கடியும் அவனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதை ஒரு புதன்கிழமை உணர்த்துகிறது. அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தால் மக்கள் கொதிப்படைந் திருந்திருக்கிறார்கள். அதனை உணர்த்தவே இப்படியொரு செயலில் இறங்கியதாக கூறுகிறார் ஷா.

ஆம், ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் அதிகார அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை மெலிந்து வருகிறது. இந்த நம்பிக்கையின்மை குண்டு வெடிப்புகளைவிட மோசமான அல்லது நியாயமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. எந்தவிதமான விளைவுகளாக இருந்தாலும் அது அரசின் கையாலாகாத்தனத்தின் குழந்தை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil