Publish Date: Tue, 04 Feb 2025 (07:57 IST)
Updated Date: Tue, 04 Feb 2025 (08:11 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிர்கால கேப்டன் தான்தான் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக தொடர் நாயகன் விருதைப் பெற்றார். அந்த தொடரில் மட்டும் அவர் 32 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் தற்காலக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக உருவாகியுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பும்ரா பற்றி ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் நானும் எனது நான்கு வயது மருமகனும் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அவன் பும்ராவின் பவுலிங் ஆக்ஷனில் எனக்குப் பந்து வீசினான். அப்போது பும்ரா எனும் கொடுங்கனவு என்னை இன்னும் தொடர்வது போல உணர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.