அமேசானின் குறுக்கே புதிய அணைகள்: ஆபத்துக்குள்ளாகும் சுற்றுச்சூழல்?
Publish Date: Thu, 15 Jun 2017 (16:39 IST)
Updated Date: Thu, 15 Jun 2017 (16:49 IST)
நூற்றுக்கணக்கான புதிய அணைகளை, உலகின் மிகப்பெரிய நதி அமைப்பு என்று சொல்லப்படும் அமேசான் வடிநிலப்பகுதி அமைந்துள்ள பிராந்தியத்தில் கட்டுவது தொடர்ந்தால், அது அந்த பகுதிக்கு குறிப்பிடத்தக்க மற்றும் சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் புனல் மின்சார உற்பத்திக்கு இருக்கும் தேவை என்பது ஆயிரக்கணக்கான தாவர வகைகளையும் விலங்குகளையும் ஆபத்தில் சிக்கவைப்பதாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது 400க்கும் மேற்பட்ட அணைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமேசான் நதி மற்றும் அதன் கிளை நதிகளில் இயற்கையாக தேங்கும் வண்டல் மண் நகர்வதை மோசமாக பாதிக்கலாம் என்று 'நேச்சர்' சஞ்சிகையில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மடிரா ஆற்றில் தொடங்கவுள்ள திட்டங்களைப் பற்றி அவர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். இந்த நதி ஆண்டிஸ்ஸில் இருந்து பிரேசில் வரைக்கும் பாய்கிறது. இதே போல பெருவின் மரான் மற்றும் யுகேயாளி ஆறுகளின் குறுக்கே கட்டப்பட திட்டமிடப்பட்டிருக்கும் அணைத் திட்டங்களைப் பற்றியும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.