Publish Date: Wed, 10 Oct 2018 (10:23 IST)
Updated Date: Wed, 10 Oct 2018 (10:27 IST)
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி மாயமானது குறித்து, சௌதி அரேபியா உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.
சௌதியின் வெளியுறவு அமைச்சர் அடெல் - அல் - ஜூபேரை தொலைபேசியில் தொடர்புகொண்ட வெளியுறவு செயலர் ஜெரீமி ஹன்ட், '' நட்பு என்பது ஒருவரையொருவர் மதித்து நடப்பதை பொருத்தது'' என தெரிவித்துள்ளார்.
கசோஜி கடைசியாக இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றார். அங்கே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என துருக்கி தெரிவிக்கிறது. ஆனால் சௌதி இதனை மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தை பொருத்தவரையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மை எனில் இந்நிகழ்வினை பிரிட்டன் மிகவும் தீவிரமான ஒன்றாக கருதி அதற்கேற்ப அணுகும் என பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி-யை இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்தில் தேடப் போவதாக துருக்கி கூறியுள்ளது.
ஜமால் கசோஜி விவகாரத்தில் புலனாய்வுக்கு ஒத்துழைக்கத் தயராக இருப்பதாக சௌதி அரேபியா கூறியுள்ள நிலையில், துருக்கி வெளியுறவு அமைச்சகம், புலனாய்வின் ஒரு பகுதியாக தூதரக கட்டடத்திற்குள் தேடுதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது.