ரஷ்யா மற்றும் ஜப்பானை தாக்கிய சுனாமி அலைகள் அமெரிக்காவையும் தாக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் அமெரிக்காவின் ஹவாய் தீவில் சுனாமி தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியுள்ளனர்.
ரஷ்யாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பான் உட்பட பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சற்றுமுன் அமெரிக்காவின் ஹவாய் தீவில் சுனாமி அலைகள் தாக்க தொடங்கியதாகவும், 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வருவதாகவும் அமெரிக்கப் பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது. நேரம் செல்ல செல்ல அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
உயரமான அலைகளைப் பார்த்து மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எந்த உயிரிழப்போ அல்லது பெரிய சேதமோ இல்லை என்றாலும், இன்னும் மூன்று மணி நேரம் சோதனையான நேரம் என்றும், அதன் பிறகுதான் நிலைமையை கணிக்க முடியும் என்றும் ஹவாய் கவர்னர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரிகன் என்ற மாகாணத்திலும் சுனாமி அலைகள் தாக்கும் என்று அந்த மாகாண அரசு எச்சரித்துள்ளது. மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.